இந்துக்களை தான் கடுமையாக காயப்படுத்தும் இந்துத்துவம் . . .

https://scroll.in/article/1021490/ramachandra-guha-how-hindutva-will-grievously-hurt-hindus

I tired to translate this. Please give feedback.


ராமச்சந்திர குஹா: இந்து பெரும்பான்மைவாதம் பரவி வரும் இந்த நிலையில் இந்துத்துவம் எப்படி இந்துக்களை தான் கடுமையாக காயப்படுத்தும் என்பது இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் அனுபவத்திலிருந்து கண்கூடாக தெரிகிறது.

1980 களில் தனது நாட்டின் இன மோதல் பற்றி எழுதுகையில், இலங்கை மானுடவியலாளர் எஸ்.ஜே.தம்பையா, சிங்களவர்களை “சிறுபான்மை மனப்பான்மை கொண்ட பெரும்பான்மையினர்” என்று விவரித்தார். நாட்டின் அரசியல், அதிகாரம் மற்றும் இராணுவம் இப்படி எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் மக்கள் தொகையில் 70% க்கும் அதிகமான சிங்களவர்கள், அவர்களின் புத்த மதம் தான் அரசு மதம், அவர்களின் சிங்கள மொழி தான் அரசு மொழி என்று இருந்தும் தங்களை ஒரு பாதிக்கப்பட்ட சமுதாயமாகவே காட்டிக் கொண்டனர்.
சிறுபான்மைத் தமிழர்களால் அச்சுறுத்தப்பட்டதாக அவர்கள் நினைத்தனர். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தபோது ஆங்கிலேயர்கள் தமிழர்களுக்கு மட்டும் சிறந்த கல்வி அளித்தார்கள் என்றும், பலமிகுந்த இந்தியாவின் ஆதரவைக் கொண்டிருப்பதால் தமிழர்கள் வலிமையாக இருப்பதாகவும் புலம்பினர். அவர்களின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படாவிட்டால், தமிழர்கள் தங்கள் தாயகமான இலங்கையை கைப்பற்றிவிடுவார்கள் என்று அஞ்சினர்.

உடுப்பி நகரில் சில குடிமக்களுக்கும் பெஜாவர் மடத்தின் சுவாமிகளுக்கும் இடையே நடந்த சந்திப்பு பற்றிய செய்தியைப் படித்தபோது, இலங்கையைப் பற்றிய தம்பையாவின் எண்ணம் எனக்கு நினைவிற்கு வந்தது. சில ஆண்டுகளாக உடுப்பி நகரமும் மாவட்டமும், , தீவிரபோக்கு இந்துத்துவத்திற்கான கர்நாடகாவின் ஆய்வகமாக உருவெடுத்துள்ளது. இந்த நகரத்தில் தான் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரால் தூண்டப்பட்ட ஒரு உள்ளூர் கல்லூரி, இதுவரை இல்லாத ஹிஜாப் மீதான தடையை அமல்படுத்தியது. மாநிலம் தழுவிய மற்றும் நாடு தழுவிய வகுப்புவாத அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சர்ச்சையைத் தூண்டியது. உடுப்பியில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலை கூட்டாக நடத்தும் எட்டு மத நிறுவனங்களில் பெஜாவர் மடமும் ஒன்றாகும்.

முஸ்லிம் கடைக்காரர்களுக்கு தடை
பல இளம் பெண்களின் கல்வி உரிமை மறுக்கப்பட காரணமான ஹிஜாப் தடையை அமல்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு, உடுப்பியின் இந்துத்துவ தீவிரபோக்காளர்கள், இந்து கோவில்கள், திருவிழாக்களின் கண்காட்சிகளில் பல ஆண்டுகளாக, அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்காக கடைபோடும் முஸ்லிம் கடைக்காரர்கள் பங்கேற்க தடை விதிக்க வைத்தனர்.

மாநில அரசிடமிருந்தோ அல்லது நீதிமன்றத்திலிருந்தோ தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்பதனால் சில முஸ்லிம்களும் அடங்கிய ஒரு குடிமக்கள் குழு மனச்சோர்வுடன் பெஜாவர் மடத்தின் தலைவரை அணுகி, மத நல்லிணக்கத்தை மேம்படுத்த முஸ்லீம் வியாபாரிகளின் மீதான தடைக்கு எதிராக தலையிடுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் அந்த சுவாமி அவர்களிடம் ” இந்து சமுதாயம் கடந்த காலத்தில் பட்ட துன்பங்கள் பல கோடி” என்று கூறினார் . மேலும் “ஒரு இனம் அல்லது குழு தொடர்ந்து அநீதியை எதிர்கொள்ளும்போது, அதன் விரக்தியும் கோபமும் பொங்கிப் பெருக்கெடுக்கும். இந்து சமுதாயம் அநீதிகளை இனிமேலும் சகித்துக்கொள்ளாது.“ என்று அவர் கூறியதாக ஒரு செய்தித்தாள் மேற்கோள் காட்டியது.

இந்து சமுதாயம் “கடந்த காலத்தில் நிறைய துன்பங்களை அனுபவித்தது” என்று, வரலாற்றின் மேற்கோளோடு சுவாமி தொடங்கினார் என்பதை நினைவில் கொள்க. கடந்த காலம் என்று அவர் குறிப்பிடுவது இடைக்காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட முஸ்லீம் மன்னர்களைப் பற்றியே என்று நினைக்கிறேன். பிரதம மந்திரி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் ஆகியோரின் சமீபத்திய உரைகளை ஆராயும்போது இத்தகைய இந்துத்துவ சொல்லாட்சிகள் எங்கும் காணப்படுகின்றன.
இன்று லக்னோ அல்லது உடுப்பியில் வசிக்கும் உழைக்கும் வர்க்க முஸ்லிம்களுக்கும் கடந்த கால முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் என்ன தொடர்பு? ஏதும் இல்லை; இவர்களும் அதே மதம் என்ற ஒரே காரணம் அவர்களை அச்சுறுத்தவும் அவமானப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முகலாயர்கள் அல்லது திப்பு சுல்தான் செய்ததற்காக (செய்யாமலும் இருந்திருக்கலாம், யாருக்கு தெரியும்?) இன்றைய இந்திய முஸ்லிம்களை குற்றவாளிகளாக நிற்க வைப்பது ஒரு கேடுகெட்ட செயலாகும். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், “தொடர்ந்து அநீதியை எதிர்கொள்ளும்” இந்துக்கள் என்று பெஜாவர் சுவாமி கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் முடிச்சுப்போடுவதை தான். யாரிடமிருந்து? எப்படி இந்த அநீதி இன்று நிகழ்கிறது? மக்கள்தொகை அடிப்படையில், இலங்கையில் இருக்கும் சிங்களவர்களை விட மிக அதிக அளவில் இந்தியாவில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அரசியல், சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகத்தின் மீதான அவர்களின் மேலாதிக்கம் கிட்டத்தட்ட முழுமையானது.

கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முற்றிலும் பின்னடைந்தவர்கள். சட்டமன்றம், அரசுத்துறை அலுவல்கள், காவல்துறை, நீதித்துறை மற்றும் தொழில்களில் மிகவும் குறைவாகவே உள்ளனர். அவர்களின் பொருளாதார நிலை உறுதியற்றதாக உள்ளது. இது போதாதென்று, இந்து மேலாதிக்கத்தை முன்னிறுத்தும் ஒரு கட்சி கர்நாடகா மற்றும் மத்திய அரசு அதிகாரத்தில் உள்ளது.

இப்படி இருந்தும், பெஜாவர் சுவாமிகள் இந்துக்கள்தான் பாகுபாடு மற்றும் அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறார். பழமையான, மக்கள் மதிப்பைப் பெற்ற, பெரும் செல்வாக்கு மிக்க ஒரு சமய அமைப்பின் தலைவர் இவ்வாறு பேசும்போது, சிறுபான்மை மனப்போக்குடன் கூடிய ஒரு பெரும்பான்மை முன்னிலையில் நாம் நிற்கிறோம் என்பதை அறியவேண்டும்.

முரட்டுத்தனமான பெரும்பான்மைவாதம்

இந்துத்துவாவின் கீழ் உள்ள இந்துக்கள் உணர்வுபூர்வமாக தாம் சிறுபான்மையினர் என்று பித்துப்பிடித்து அலைகிறார்கள். ஆனால் அவர்கள் செயல்படும்விதமோ, பெரும்பான்மை என்னும் மமதையோடு. தங்கள் எண்ணிக்கையின் பலத்தைப் பயன்படுத்தி, அவர்கள் கீழ் இருக்கும் அரசு, நிர்வாகம், ஊடகங்கள் மற்றும் நீதித்துறை கட்டுப்பாட்டின் மூலம் இந்துக்கள் அல்லாதவர்கள் மீது இரக்கமின்றி தங்கள் திட்டத்தைச் திணிக்கிறார்கள்.

ஹிஜாப், ஹலால் இறைச்சி மற்றும் அசான் ஆகியவற்றை தடை செய்ய இந்துத்துவா குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் இந்த முரட்டுத்தனமான பெரும்பான்மைவாதத்தின் மிக சமீபத்திய எடுத்துக்காட்டுகள். இதுதவிர, இந்திய முஸ்லிம்களை அடிபணிய வைக்கும் மற்றும் அவமானப்படுத்தும் செயல்முறை வேறு பல வடிவங்களிலும் உள்ளது.

இந்திய முஸ்லீம்கள் மீதான இந்துத்துவாவின் தாக்குதலுக்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு வேறுபட்ட பரிமாணங்கள் உள்ளன. முதல் பரிமாணம் அரசியல். இந்துத்துவா கூடாரத்திற்குள் கணிசமான பகுதியான தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஈர்ப்பதன் மூலம் “இந்து” ஓட்டு வங்கியை உருவாக்கும் கொடூரமான வெற்றிகரமான முயற்சி. பெரும்பாலான மாநிலங்களில், ஏறத்தாழ 80% வாக்காளர்கள் இந்துக்களாக இருப்பதால், அவர்களில் சுமார் 60% பேர் இந்த இந்து நேச , முஸ்லீம் விரோத பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்தால், வெற்றி நிச்சயம் தானே. (இங்குதான் பா.ஜ.க.வை எதிர்க்க ஒரே ஒரு பெரிய அரசியல் கட்சி உள்ளது. பல கட்சிகள் வலிமையோடிருக்கும் மாநிலங்களில் கூட பாஜக வெற்றிபெற 50% இந்து வாக்குகள் போதும்.)

சிறுபான்மையினர் மீதான இந்துத்துவாவின் தாக்குதலின் இரண்டாவது பரிமாணம் தத்துவம் சார்ந்தது: இந்துக்கள் மட்டுமே இந்த மண்ணின் உண்மையான, உண்மையான, நம்பகமான குடிமக்கள், மற்ற இந்திய முஸ்லீம்கள் (இந்திய கிறிஸ்தவர்களும்) எப்படியோ சட்டபூர்வமற்றவர்களாகவும் நம்பமுடியாதவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். காரணம்? (வி.டி. சாவர்க்கரின் மோசமான உருவாக்கத்தில்) அவர்களின் புனித வழிபாட்டுத் தலம் அவர்களின் தாயகத்திற்கு வெளியே அமைந்துள்ளது. தாங்கள் தான் மண்ணின் மைந்தர் என்ற இந்த உணர்வு, இந்துத்துவா ஆர்வலர்களை, இந்திய முஸ்லிம்களின் உடை, உணவு வகைகள், பழக்கவழக்கங்கள், பொருளாதார வாழ்வாதாரம் மற்றும் பலவற்றைப் பற்றி தொடர்ந்து தூண்டிவிட்டு கேலி செய்ய தூண்டுகிறது.

மைசூருவில் சமீபத்தில் , துணிச்சலான மற்றும் மிகவும் போற்றப்படும் கன்னட எழுத்தாளர், தேவனூர் மகாதேவா, இந்துத்துவா குண்டர்களால் விதிக்கப்பட்ட தடையை மீறி ஹலால் இறைச்சியை வாங்கினார். அவர் இதைச் செய்யும்போது, ​​”வெறுப்பு என்பது வலதுசாரிகளின் ஆற்றல் பானம்” என்று கூறினார். இது ஒரு அற்புதமான சுருக்கமான விளக்கம். இதற்கு என்னுடைய சிறிய விளக்கத்தையும் கொடுக்க அனுமதியுங்கள். இந்த ஆற்றல் பானத்தில் உள்ள வெறுப்புடன் பைத்தியக்காரத்தன்மையும் கலந்துள்ளது. இந்துத்வாவின் செல்வாக்கின் கீழ் உள்ள இந்துக்கள் பாதுகாப்பற்றவர்களாக பயமுறுத்தப்படுகிறார்கள். தங்கள் முஸ்லிம் சக குடிமக்கள் மீது காரணமற்ற வெறுப்புடன் உழல்கிறார்கள்.

இந்த தத்துவத்தை கடைபிடிப்பது அண்மைக் காலத்தில் இந்திய முஸ்லிம்களை (ஏற்கனவே செய்வது போல்) கடுமையாக காயப்படுத்தும். ஆனால், தொலைநோக்கில், அது இந்துக்களையும் வேட்டையாடடும், காயப்படுத்தும். இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் இழிவுபடுத்துவதும், பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், அஹ்மதியாக்கள், ஷியாக்கள் மீதான இளக்காரம், மியான்மரில் ரோஹிங்கியாக்கள் மீதான களங்கம் இவையெல்லாம் இந்த விஷயத்தில் நமக்கு அபாய அறிவிப்புகள். இந்த மூன்று நாடுகளும் மதப் பெரும்பான்மைவாதத்திற்கு அடிமையாகாமல் இருந்திருந்தால் இன்று மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். வெறுப்பும் பித்துநிலையும் அமைதியான வளமான சமூகங்களை வளர்க்கவோ அல்லது கட்டியெழுப்பவோ வழிவகுப்பதில்லை.

மனதின் குரல். . .

நல்லவரு வல்லவரு எங்க அண்ணாச்சி
மனந்திறந்து பேசுவாரு எங்க அண்ணாச்சி
அன்ப உருவமான எங்க அண்ணாச்சி சொன்னால்
முயலுக்கும் மூணுகால் தான் ஒத்துக்கொள்ளுங்க!

சந்திரயான் அனுப்பினார எங்க அண்ணாச்சி
அது நிலாவில தொலைஞ்சிருச்சே வருத்தப்படாதே.
தேடிக்கிட்டு போக மாட்டார் எங்க அண்ணாச்சி ங்கள
படுத்தாம விடமாட்டார் எங்க அண்ணாச்சி!

அடிச்சாலும் புடிச்சாலும் சொந்தக்காரண்டா
அண்ணாச்சி நமக்கெல்லாம் தெய்வம் போலடா!
காஷ்மீரை பாருங்கடா சாட்சி சொல்லுது
கோவக்கார சொந்தம்டா நம்ம அண்ணாச்சி

அம்மா அடிச்சாலும் அன்பில தாண்டா
அண்ணாச்சி அடிச்சாலும் அன்பில தாண்டா
பெல்லட்டும் துப்பாக்கியும் மிளகாய்ப்பொடியும் உங்களை
அன்போட பணிய வைக்கும் வழிகள் தானடா.

அண்ணாச்சி வாழ்கவென்று மெட்டு போடுங்க
வசதி வாய்ப்பு தேடிவரும் நம்பித்தொலைங்க
அண்ணாச்சி சொல்லறத கேட்டு நடங்க – பிரித்தாளும்
சூட்சுமத்த போற்றி பாடுங்க
.

வாங்கடா நாம ல்லாம் கோயில் கட்டுவோம்
ராம ராம என்றுசொல்லி நாமம் போடுவோம்
சொல்லாதவன் செத்துடுவான் கவலைப்படாதே அதனாலே
ஆபத்து நமக்கில்லே கலக்கப்படாதே!

அறிவியல, ஆன்மிகமா என்ன வேணுண்டா
அண்ணாச்சியின் ஞானத்துக்கு எல்லை ஏதடா?
மனுசனுக்கு யானைத்தல தைச்சி வச்சவண்டா அதனால்
இந்து இந்து என்று மாரை தட்டிக்கொள்ளடா!

அடி மனசில் இருக்கிறத வெளிய சொல்லாத
கொண்டாட்டத்தை கெடுக்கவேண்டாம் சொன்னா கேளுப்பா
அண்ணாச்சி இருக்கையிலே எதுக்கு யோசனை?
நேரத்துக்கு ஓடும்பாரு ரயிலு வண்டிகளும்!

Translated from our friends’ blog. . . . original english poem here

மியான்மார் (பர்மா) அனுபவம்


அமிதவ் கோஷ் எழுதிய கண்ணாடி மாளிகை படித்ததிலிருந்தே பர்மாவைப் (புதிய பெயர் மியான்மார்) பற்றிய ஒரு பிரமாண்டம் என்னைப் பற்றிக்கொண்டது. நமது நாட்டின் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்ல நேரும்போதெல்லாம் இந்த உணர்வு தலைதூக்கும். ஆகையால் போன வாரம் வேலை நிமித்தமாக அங்கு வரும்படி அழைப்பு வந்தபோது உடனே ஏற்றுக்கொண்டேன்.
சென்னையில் இருந்து நள்ளிரவில் விமானத்தில் ஏறி பாங்காக்கில் இறங்கி பிறகு அங்கிருந்து பிறிதொரு விமானத்தில் மண்டலாய் போய் சேர கிட்டத்தட்ட எட்டு ஒன்பது மணி நேரமானது. விமான நிலையத்தில் நுழைந்தவுடன் எங்கே இருக்கிறோம் என்று புரியாமல் ஒரு தடுமாற்றம் ஏதோ தமிழ்நாட்டில் கிராமத்தில் இருப்பது போல. . .எங்கும் ஆண்கள் லுங்கி சட்டையோடு. . .டாக்ஸி ஓட்டுனர்கள், விமான நிலைய அதிகாரிகள், கடைக்காரர்கள் எல்லோரும் லுங்கியோடு. . . வெளியே வந்தபின்னும் நிலமும் பயிர் வகைகளும் ( அங்கும் முதலில் தென்பட்டது குச்சிக்கிழங்கு தான்) கூட நம்மவை போலவே.


எங்கள் வேலை பற்றிய சந்திப்பு பியின் ஊ லிவின் என்ற ஊரில் நிகழ்ந்தது. பியின் ஊ லிவின் ஒரு அழகான மலைநகரம். வழக்கம் போல வெள்ளைக்கார துரைமார்கள் பர்மாவின் வெய்யிலைத் தப்பிக்க கண்டுகொண்ட ஒரு சிறிய கிராமமாய் தான் இருந்தது இது சமீப காலம் வரை. இப்போது மியான்மாரின் நடுத்தர வர்க்கத்திற்கு கோடைகாலத்து புகலிடமாய் வளர்ந்து வருகிறது. அழகான கூட்டமில்லாத மரங்கள் அடர்ந்த சாலைகள். அமைதி கொட்டிக்கிடக்கும் வீதிகள், வீடுகள். சலனமில்லாமல் வரவேற்கும் ஏரிகள். வித்தியாசமான சுவை மணத்துடன் உணவகங்கள். மொத்தத்தில் மயங்க வைக்கும் ஒரு எழில் நகரம்.


மூன்று நாட்கள் பேசி, நடந்து, உண்டு களித்த பிறகு, பிரியவே மனமில்லாமல் தலைநகரமான யாங்கோன் ( பழைய பெயர் ரங்கூன்) திரும்பினோம். எத்தனை வேறுபாடு? ஆனால் நமது பெருநகரங்களுடன் எத்தனை ஒற்றுமை? எங்கு நோக்கினும் தலைகள், சாரிசாரியாய் ஊர்ந்து செல்லும் வண்டிகள், வான்தொட போட்டி போடும் விடுதிகள் அலுவலகங்கள், திகைத்து திண்டாடும் தெருவோர பிச்சைக்காரர்கள். . .
எனக்கென கிடைத்த நேரத்தில் இங்கிருக்கும் பிரபலமான ஷ்வேடகான் புத்த விஹாரத்திற்கு சென்றேன். மலைக்க வைக்கும் நெடிதுயர்ந்த ஸ்தூபிகள் தங்கத் தகடுகளை சுமந்து கொண்டு பளிச்சிட்டன. ஆசையை விட்டொழிக்கச் சொன்ன புத்தரையே வைரத்தால் தங்கத்தால் இழைத்திருக்கிறார்கள்!


புத்த மதத்தின் மிக முக்கிய புண்ணிய தலமிது. கூட்டம் அலைமோதுகிறது தினமும். இங்கு ஒவ்வொருவர் பிறந்த கிழமைக்கும் ஒரு உருவத்தை வணங்கி அபிஷேகம் செய்கிறார்கள். பிறந்த கிழமைப் படி
திங்கள் புலி
செவ்வாய் சிங்கம்
புதன் முதல்பாதி —-யானை தந்தங்களுடன்
இரண்டாம் பாதி தந்தம் இல்லாத யானை
வியாழன் எலி
வெள்ளி வெள்ளை பெருச்சாளி
சனிடிராகன்
ஞாயிறு கருடன்
எட்டு திசைகளை ஆளும் இவற்றிற்கு பூசை செய்கிறார்கள்.

எத்தனை எத்தனை புத்தர்கள்! வெவ்வேறு வடிவங்களில் அளவுகளில்! ஆல மரத்தடியிலெல்லாம் அமர்ந்திருக்கும் புத்தர்!

15 லட்சம் தமிழர்கள் இங்கு குடிமக்கள். ஆனால் வெகு சிலரே தமிழ் பேசுபவர்கள். இந்துமத கோயில்களும் பலப்பல.
மொத்தத்தில் ஒரு இனிய அனுபவம். மீண்டுமொரு முறை நீண்ட பயணம் செய்ய வேண்டிய நாடு பர்மா என்னும் மியான்மார். . .

பாட்டும் கதையும்

(Translated from A Flowering Tree And Other Oral Tales from India by A. K. Ramanujan)

ஒரு நல்ல பாட்டும் ஒரு அருமையான கதையும் தெரிந்த ஒரு குடும்பத்தலைவி இருந்தாள். ஆனால் அவள் யாருக்கும் அந்த கதையை சொன்னதில்லை. எப்பொழுதும் அந்தப் பாடலை பாடியதும் இல்லை.

அவளுக்குள் சிறைப்பட்டிருந்த பாடலும் கதையும் திணறிக்கொண்டிருந்தன. எப்படியாவது வெளியேறி தப்பிவிட விரும்பின. ஒரு நாள் அந்தப் பெண்மணி அசந்து தூங்கிக் கொண்டிருந்த போது அவளது வாய் சற்று திறந்திருந்தது. தருணம் பார்த்து காத்திருந்த கதை வெளியே குதித்து செருப்பாக மாறி வீட்டுக்கு வெளியே அமர்ந்து கொண்டது. பின்னாடியே பாடலும் தப்பித்து ஒரு முழுக்கை சட்டையாக மாறி கொடியில் தொங்கியது.

வெளியே போயிருந்த அந்தப் பெண்ணின் கணவன் வீடு திரும்பிய போது புது செருப்பையும் சட்டையையும் பார்த்து யார் வந்திருக்கிறார்கள்என்று கேட்டான்.

யாரும் வரவில்லையேஎன்று அந்தப் பெண் சொன்னாள்.

அப்படியென்றால் இந்த சட்டையும், செருப்பும் யாருடையதுஎன்று கணவன் கேட்டான்.

எனக்கு எப்படித் தெரியும்?” என்றாள்.

இந்த பதிலால் திருப்தி அடையாத கணவன் சந்தேகப்பட்டான். வார்த்தை முற்றி சண்டையில் முடிந்தது. கோபம் கொந்தளிக்க கணவன் ஒரு போர்வையை எடுத்துக்கொண்டு படுத்துக்கொள்ள அனுமார் கோவிலுக்கு போய்விட்டான்.

மனைவிக்கு ஒன்றுமே புரியவில்லை. தனியாக வீட்டில் இருந்த அவள் இந்த சட்டையும் செருப்பும் யாருடையதாக இருக்கும் என்று தனக்குத் தானே கேட்டு கேட்டு மூளை குழம்பினாள். விளக்கை அணைத்து விட்டு படுத்தாள்.

ஊரில் உள்ள எல்லா விளக்குகளும் அவை அணைக்கப்பட்டவுடன் அவற்றின் சுடர்கள் அனுமார் கோவிலுக்கு வந்து விடிய விடிய வம்பு பேசுவது வழக்கம். அன்று ஒரு சுடர் மட்டும் தாமதமாக வந்தது.

ஏன் இன்று இத்தனை நேரம்?” என்று மற்ற சுடர்கள் எல்லாம் கேட்டன.

எங்கள் வீட்டு தம்பதிகளுக்குள் இரவு முழுக்க ஒரே சண்டைஎன்றது அந்த சுடர்.

எதற்காக?”

கணவன் வீட்டில் இல்லாத போது ஒரு சட்டையும் செருப்பும் வீட்டிற்குள் வந்திருந்தன. அவை யாருடையவை என்று அவன் கேட்டான். அவள் தெரியாது என்றாள். அதற்கு தான் இவ்வளவு சண்டை.”

அந்த சட்டையும் செருப்பும் எங்கிருந்து, எப்படி வந்தன?”

அந்தப் பெண்மணிக்கு ஒரு நல்ல பாட்டும் ஒரு அருமையான கதையும் தெரியும். ஆனால் அவள் இவற்றை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தாள். அடைபட்டு மூச்சு திணறிக் கொண்டிருந்த அவை தப்பி வெளியேறி சட்டையும் செருப்புமாய் மாறி அவளைப் பழிவாங்கி விட்டன. அந்தப் பெண்ணிற்கு இது தெரியாது.”

அங்கே தூங்க வந்திருந்த கணவனின் காதில் இந்த விசயம் விழுந்தவுடன் அவன் சந்தேகம் நீங்கியது. விடியற்காலை வீட்டிற்கு போன அவன் மனைவியிடம் பாட்டையும் கதையையும் பற்றி கேட்டான்.

பாட்டா, கதையா, அது என்னஎன்றாள் அவள்.

நைஜீரியா – 2

சைவர்களுக்கு மிகவும் சோதனை தரும் நாடு நைஜீரியா. முதல் சில பயணங்களில், சைவம் என்று நம்பி வாங்கி ஏமாந்திருக்கிறேன். ஒரு விடுதியில், அவர்களுடைய மெனு கார்டில் “vegetarian” என்று தனி பகுதியை பார்த்து ஆனந்தப்பட்டு அதில் இருந்த சூப் ஆர்டர் செய்தேன். அவர்கள் கொண்டு வந்து கொடுத்தது vegetarianனும் அல்ல, சூப்பும் அல்ல! கீரைக் கூட்டு போல இருந்தது. வாயில் வைத்தால் ஒரே மீன் வாடை. உடனே கூப்பிட்டேன் சமையல்காரரை. அவர் சொன்னார், காய் கறி ஏதாவது கலந்திருந்தால் அது vegetarian என்றும், மீன் சிறிய அளவில் கலந்தால் தான் சுவையாக இருக்கும் என்றும் !

இதன் பிறகு, நான் ஏதாவது ஆர்டர் செய்யுமுன், எது எது இருக்கக் கூடாது என்று ஒரு பட்டியல் போட்டு சொல்வேன்.

நைஜீரியாவில் எல்லோரும் எப்போதும் மாமிசம் தான் சாப்பிடுவார்கள் என்று உறுதிப் படுத்திக் கொள்ள பலரிடம் பேசினேன். இங்கே இந்தியாவில் அரிசிச் சோறு எப்படியொரு சமூக அந்தஸ்தை கொடுக்கிறதோ அது போல அங்கு மாமிசம். கிராமப்புறங்களில் இன்னமும் பல வகையான சிறு தானியங்கள் தான் முக்கிய உணவு. ஆனால் இது பட்டிக்காட்டு காட்டுமிராண்டி உணவு என்று படித்த, அல்லது மேல்மட்ட வர்க்கத்தால் எள்ளி நகையாடப் படுகிறது. பெரிய உணவகங்களில் இவை கிடைக்காது. ( பெரிய உணவகம் என்பதே மிக அரிது. நடுத்தர என்பதே சரியாக இருக்கும்.) தெருவோர தள்ளு வண்டி கடைகளில் தான் கிடைக்கும் என்று கண்டு பிடிக்கவே சில வருடங்கள் ஆகி விட்டது.

இன்னொரு புரியாத அல்லது தெரியாத ஒரு விஷயம்: அன்று கறந்த பால் (fresh milk) என்பதே இல்லை போல. பால் தூள் அல்லது பதப்படுத்தப்பட்ட பால் டப்பா மட்டுமே எங்கு பார்த்தாலும். . .சில நண்பர்கள் சொன்னார்கள் சில இடங்களில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காய்ச்சிய பால் கிடைக்கும் என்று. . .தயிர் என்பதும் மிக அரிய ஒரு விஷயம். வெளிநாட்டு yogurt பாக்கெட் தான். . .அதுவும் நல்ல plain yogurt மிக அரிது. இனிப்பு சேர்த்த தயிர் மட்டுமே எளிதாக கிடைக்கும்.

சைவ உணவுகள் தேடத் தேட நிறைய கிடைக்க ஆரம்பித்தன. நம்ம ஊர் பணியாரம் போல அவர்களின் வெய்னா. போண்டாவை போன்ற பேங்கே/ அகாரா. பீன்ஸை அரைத்து வேகவைத்து செய்யும் மோய் மோய். சோளம் கம்பு இடித்து செய்யும் குஸ்குஸ் (couscous). . .

Moi moi ( மோய் மோய்)

வெய்னா எனப்படும் பணியாரம்.

பேங்கே எனப்படும் போண்டா.

பணியாரம் சுடும் மண் சட்டி.

இன்னும் தொடரும். . .

நைஜீரியா – 1

2008ல் இருந்து நான் பலமுறை பயணம் செய்த நாடுகளில் முதன்மையானது. முதலிரு பயணங்களில் என்னிடம் ஒருவித அலட்சியமும் வெறுப்பும் நிரம்பி இருந்தன. பலப்பல நூற்றாண்டுகளாக மாறாத ஒரு சமுதாயம் என்று ஒரு எள்ளல் ஊடுருவிக் கிடந்த, என்னடா உங்கள் வரலாறு என்று எகத்தாளமாய் பேசிக் கொண்டிருந்த காலம் அது. . . சிறுக சிறுக அது மாறியது. இப்போது ஒரு பரிதாப உணர்ச்சியும், ஆதிக்க வர்க்க நாடுகளின் மீதான கையாலாகாத என் கோபமுமே மிஞ்சி நிற்கிறது.

இந்தியாவைப் போலவே நைஜீரியாவும் ஒரு கூட்டமைப்பு நாடு. வெவ்வேறு இனங்கள், கலாசாரங்கள், தொல்குடி மக்கள், சுற்றுச்சூழல் வேறுபாடுகள்- வளமான தெற்கு, வறண்ட வடக்கு, எல்லாம் சேர்ந்தது தான் நைஜீரியா.

1960கள் வரை மிக வலுவான பொருளாதார நாடுகளில் ஒன்றாக இருந்த நாடு, இன்று? உலகத்தின் ஏழை நாடுகளின் பட்டியலில் 60வது இடத்தில் உள்ளது. . இதன் காரணம் கேட்டால், நம்ப மாட்டீர்கள்! 1956ல் அங்கு பெட்ரோலியம் இருப்பது உறுதிப்பட்டது. விவசாயத்தை நம்பி இருந்த ஒரு சமுதாயம், எண்ணெய் வளையில் விழுந்தது.

எண்ணெய் எடுக்கும் மற்ற நாடுகள் போல பணம் கொழிக்கும் நாடு அல்ல நைஜீரியா. எடுக்கும் எண்ணையை சுத்திகரிக்க ஒரு ஆலை கூட இது வரை இல்லை. கச்சா எண்ணெய் கப்பல்களில் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படும், அவை சுத்திகரிப்பு செய்து, கூலியாக பாதிக்கு பாதி எண்ணையை எடுத்துக் கொண்டு மீதி பாதியை திரும்ப அனுப்புவார்கள் ! அபத்தமாக இல்லை? ஏனிந்த நிலை? 1960லிருந்து 1980 வரை, இந்த எண்ணை கிணறுகள் பன்னாட்டு நிறுவனங்களின் சொத்தாக இருந்தன. வளம் கொள்ளையடிக்கப் பட்டது. சில நில உரிமையாளர்களும், அரசியல்வாதிகளும் கோடி கோடியாக சம்பாதித்தார்கள். நாட்டை ஓட்டாண்டி ஆக்கினார்கள். விவசாயிகள் எண்ணைக்காக நல்ல விலையில் விவசாய நிலங்களை விற்றார்கள். சில ஆண்டுகள் செல்வச் செழிப்போடு ஆட்டம். பிறகு?? காசும் இல்லை காடும் இல்லை. உணவுப் பொருட்களை ஏற்றுமதி செய்து வந்த நைஜீரியா, இன்று அவற்றை இறக்குமதி செய்யும் அவலம். இந்த எண்ணை கதை இன்னும் கொடூரமானது. 1980 களில் எண்ணை விலை சரிய தொடங்கிய போது, பன்னாட்டு நிறுவனங்கள் மிக நல்ல மனம் கொண்ட உத்தமர்களாக மாறி, நைஜீரியா அரசாங்கத்திடம் தங்கள் பங்குகளை விற்றார்கள். விலை வீழ்ந்த போது நட்டப் பட்டது அரசு, வேடிக்கை பார்த்தன நிறுவனங்கள். அத்தோடு முடியவில்லை இந்த கயமை. எண்ணை விலை ஏறிய போது, மறுபடியும் தனியார் மயமாக்கப்பட்டது. . .தொடர்கிறது இந்த நயசஞ்சகம். . .

தென் மாநிலங்களில் ” முன்னேற்றம் ” வந்து கொண்டிருப்பதால் மனித நேயம் தேய்ந்து கொண்டிருப்பதை கண் கூடாக பார்க்கலாம். நிலம் வறண்டு கிடந்தாலும் மனம் பசுமையாய் இருக்கும் வட மாநிலங்களில் பயணம் செய்வது இனிய அனுபவம். இங்கே அடுத்தவரின் குசலம் விசாரிக்க நேரம் இருக்கிறது, உதவி செய்யும் பண்பு பரவிக் கிடக்கிறது. இது பெரும்பான்மையான பொதுவான ஒரு நோக்கு தான். தெற்கிலும் நல்ல மனிதர்கள் இல்லாமல் இல்லை. வடக்கில் அனைவரும் உத்தமரும் இல்லை.

கலாசார வரலாறு கண் கலங்க வைக்கிறது. தொல்குடி மக்கள் நிறைந்ததாக இருந்த நைஜீரியா முதலில், பத்தாம் நூற்றாண்டு காலத்தில் வட கிழக்கிலிருந்து வந்த இஸ்லாமிய கொள்கைகளின் ஆதிக்கத்தால் மாறத் தொடங்கியது. வட மாநிலங்களில் இன்றும் பெருமான்மை முஸ்லிம் மதத்தவர் தான். பின், அடிமை வியாபாரம் செய்ய வந்த ஐரோப்பிய நாட்டவர் கிறித்துவத்தை தீவிரமாக பரப்ப , பழைய பழங்குடி நம்பிக்கைகள், வழிபாட்டு முறைகள் மறைய தொடங்கின. இதில் வேடிக்கை என்னவென்றால், இன்றைய நவ நாகரீக நைஜீரியர்கள், பழைய வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பவர்களை காட்டுமிராண்டிகள் என்று கேலி செய்கிறார்கள். நான் சொன்னேன், “ஐயா, அப்படிப் பார்த்தால் இந்தியாவில் நாங்கள் அனைவரும் காட்டுமிராண்டிகள் தான்.” வாயடைத்து போய்விட்டது, இவர்கள் அனைவரும் இந்தியாவின் மீது பெருமதிப்பு வைத்திருப்பவர்கள். பழையவை எல்லாம் முட்டாள் தனமல்ல, புதியவை எல்லாம் நல்லதுமல்ல என்று புரிதலுக்கான முயற்சி மிகக் குறைவே காணப்படுகிறது.

—தொடரும்—

பசங்கள் அதிகம் படிப்பதில்லை!

Translated from this article: https://www.theatlantic.com/education/archive/2018/09/why-girls-are-better-reading-boys/571429/

அமெரிக்கா போன்ற வளர்ந்த மேம்பட்ட நாடுகள் சென்ற நூற்றாண்டில் கல்வித் துறையில் ஒரு உன்னதமான மாற்றத்தைக் கண்டிருக்கின்றன : ஒரு காலத்தில் பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் புறக்கணிக்கப்பட்ட, ஓரங்கட்டப்பட்ட சிறுமிகளும் பெண்களும் இன்று அந்த நிறுவனங்களில் பெருமளவில் இடம் பிடித்து விட்டார்கள். 1970களில், மொத்த மாணவர் தொகையில் 40 விழுக்காடே இருந்த பெண்கள் இன்று 56 விழுக்காட்டில் பெரும்பான்மை பெற்று முன் நிற்கிறார்கள்.

இந்த முன்னேற்றத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும், அதிகம் முன் வைக்கப்படாத ஒரு காரணம் உண்டு: சிறுவர்களை விட சிறுமிகள் அதித அளவில் புத்தகம் படிக்கிறார்கள் என்பது தான் அது. இங்கிலாந்திலுள்ள ஸ்காட்லாந்தின் டண்டீ பல்கலைக்கழகத்தின் கல்வி/சமூகத்துறை பேராசிரியர் கீத் டாப்பிங் குழந்தைகளின் படிக்கும் பழக்கம் பற்றி நடத்திய ஆய்வு முடிவில் மூன்று காரணிகளை முன்வைக்கிறார்.

  1. சிறுமிகளோடு ஒப்பிட்டு நோக்கும் போது சிறுவர்கள் வார்த்தைகளைப் புரிந்துகொள்ளும் முயற்சியில் குறைவாகவே ஆர்வம் காட்டுகிறார்கள்.
  2. நடுநடுவே பத்திகளை விட்டுப் படிக்கிறார்கள் அல்லது முழுப் பகுதிகளையே படிக்காமல் விடுகிறார்கள்.
  3. பெரும்பாலும் தங்கள் வாசிப்பு திறனுக்கும் கீழே உள்ள புத்தகங்களையே தேர்ந்தெடுக்கிறார்கள் .

அவர் அடுத்து சொல்கிறார் சிறுமிகள் எல்லாவற்றையும் முழுமனதுடன் செய்ய தலைப்படுகிறார்கள். சிறுவர்களோ சில அல்லது பெரும்பாலான பள்ளிப் பாடங்களை அரைமனதுடனே அணுகுகிறார்கள்.” இன்னும் இது போல நடத்தப்பட்ட பலப்பல ஆய்வுகள் மூலம் சிறுமிகள தம் மன மகிழ்ச்சிக்காகவே வாசிக்கிறார்கள் என்று புலப்படுகிறது.

ஆனால் இது பிரிட்டனில் மட்டுமுள்ள நிலையல்ல. வாசிப்பு ஆர்வத்தில் பெண்களின் முதனிலை எல்லா வளர்ந்த நாடுகளிலும் காணக் கிடைக்கிறது. 2009ம் ஆண்டில் உலக அளவில் 65 நாடுகளில் 15 வயதுடையோரின் கல்வித் திறன் பற்றி ஓர் ஆய்வநடத்தப்பட்டது. இதில் 64 நாடுகளில் சிறுவர்களை விட அதிக எண்ணிக்கையிலான சிறுமிகள் தம் உள்ளின்பத்திற்காக வாசிப்பதாக கூறினர். சராசரியாக இந்த நாடுகளில் ஆய்வில் பங்கெடுத்துக்கொண்டவரில் பாதி சிறுவர்களே இன்பத்திற்காக படிப்பதாக சொன்னார்கள். சிறுமிகளிலோ நான்கில் மூன்று பேர் இப்படி படிப்பதாக கூறினர். (இந்த புள்ளிவிவரம் வளர்ந்து வரும்/ ஏழை நாடுகளில் ஒத்து வராது ஏனெனில் இங்கே பெண்களின் படிப்பறிவு சூழல் ஆண்களுக்கு இருப்பதை விட குறைவாகவே உள்ளது.)

லகமெங்கும் இப்படி பெண்கள் ஆண்களை விட அதிகம் படிப்பதின் ரகசியம் ஆண் பெண் உடல்கூறு வேறுபாட்டால் அல்ல. “மூளைத்திறன் இருபாலார்க்கும் ஒன்று தான். வேறுபாடுகள் நிகழ்வது சமூக கட்டுப்பாடுகளினால் மட்டும மரபணுக்களால் அல்ல. பொதுவாக சிறுவர்கள் தமது சகாக்களின் மதிப்பை பெற வேண்டுமென்ற அழுத்தத்தல் அதிகம் பாதிப்படைகிறார்கள். அங்கே படிப்பது என்பது எள்ளி நகையாடப்படுகிறது” என்கிறார் சிகாகோ மருத்துவ கல்லூரியின் நரம்பியல் நிபுணர் லிசே எலியட்.

ஸ்திரேலியாவிலுள்ள கிரிபித் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உளவியல் நிபுணர் டேவிட் ரெய்லி சமீபத்தில் பங்கேற்ற வாசிப்பில் பாலின வேறுபாடுகள்பற்றிய ஆய்வில் மேற்கூறிய வாதங்களையே வந்தடைகிறார். அதனோடு கூட, விரும்பி, புரிந்து வாசிப்பது என்பது பெண்ணின் இயல்பு என்றும் சுட்டிக்காட்டுகின்றார். சிறுமிகள் சிறுவர்களை விட முன்னதாகவே மன முதிர்ச்சி அடைவதும் கூட இந்த வேறுபாட்டிற்கு காரணமாய் இருக்கலாம் என்கிறார். ஏன் சிறுவர்கள் வாசிக்கும் பழக்கம் ஏற்படுத்திக்கொள்வதை ஒரு போராட்டமாக பார்க்கிறார்கள் என்பதையும் விளக்குகிறார். “அவர்களது ஆர்வத்தை ரசனையை தூண்டும் சரியான இலக்கியத்தை கொடுங்கள். மிக விரைவில் அவர்கள் வாசிப்பில் மாற்றத்தை காண்பீர்கள் என்கிறார். நகைச்சுவை புத்தகங்களை உதாரணமாக சொல்கிறார்.

பள்ளிக்கூடங்கள் சிறுவரை கவர்ந்திழுக்கும் படியான யதார்த்தமான நகைச்சுவையான புத்தகங்களை நூலகங்களில் நிரப்ப வேண்டும். பல வேறு வகையான படைப்புகளை பல வேறு நோக்கங்களுக்காக வாசிக்கும் திறன் வெளியுலக வாழ்விற்கு இன்றியமையாத ஒன்றுஅறிவுறுத்துகிறார் கீத் டாப்பிங்.

மகளிருக்கு மட்டும் வாசிப்பதில் இவ்வளவு ஆர்வம் ஏன் என்ற இந்த புரிதல், லகெங்கும் விடாப்பிடியாக இருந்து வரும் பாலியல் ரீதியான கல்வித்துறை ஏற்ற தாழ்வுகளை ஆண் கல்வியின் பின்னோக்குத்தன்மையைஒழிக்க ஒரு வேளை உதவலாம்.

கட்டாயத்திற்காக அன்றி மகிழ்ச்சிக்காக படிக்கும் பழக்கம் வகுப்பறையிலும் நல்ல பலன் தரும். ரெய்லி சொல்கிறார் எந்த ஒரு திறமையையும் பயிற்சியால் மேம்படுத்தலாம். தன்னார்வம் கொண்டு பாட புத்தகங்களொடு மற்றவற்றையும் வாசிக்கும் சிறார்களுக்கு ஆயிரக்கணக்கான வாசிப்பு மணித்துளிகள் மேம்பட்ட வாழ்விற்கு வழிகாட்ட காத்திருக்கின்றன.”

ிறைய படியுங்கள், புதிய பார்வை பெறுவீர்கள்.

18வது அட்சக்கோடு

வெகு சில கதைகள் படித்து முடித்த பின்னும் மனதை பிசைந்து கொண்டே இருக்கும். அசோகமித்திரனின் இந்த கதையும் அப்படித் தான்.

உலுக்கி எடுக்கும் சரித்திர நிகழ்வுகள் பற்றி படிக்கும்போது பெரும்பாலும் அது நிகழ காரணமாயிருந்த தலைவரைப் பற்றியோ, அமைப்புகளைப் பற்றியோ தான் நாம் அறிய முடிகிறது. சாதாரண மக்களின் வாழ்க்கை அதில் எவ்வாறு இழுத்துச் செல்லப் படுகிறது என்பது தெரிவதில்லை. பாபர் படையெடுப்பில் கிராமங்கள் எவ்வாறு பாதிக்கப்பட்டன, அவற்றின் வயல்வெளிகள் எப்படி அழிக்கப்பட்டன, அது எத்தனை பேரை எவ்வளவு நாள் பட்டினி கிடக்கச் செய்தது போன்ற தகவல்கள் நமக்கு கிடைக்காது.

18வது அட்சக்கோடு ஐதராபாத் இந்தியாவுடன் இணைய மறுத்த கால கட்டத்தில் நிகழும் ஒரு கதை. ஒரு சாதாரண இளைஞனின் கண்ணோட்டத்தில் நகர்ந்து செல்கிறது. இந்து முஸ்லிம் உறவுகள் எப்படி ஒரு சிறு துளி காலத்தில் முற்றிலுமாக மாறுகின்றன/ மாற்றப்படுகின்றன என்று துல்லியமாக படம் பிடித்து காட்டுகின்றது.

இன்னொரு அதிசயமான ஒரு உண்மையும் நிரூபனமாகிறது: நல்ல கதைகள் எக்காலத்திலும் பொருந்தும் சமூகத்தின் கண்ணாடியாக விளங்குகின்றன. இக்கதையும் அப்படியே. நிஜாமுக்கு பதிலாக இன்றைய அரசை போட்டு படித்தால் மிகவும் பொருத்தமாய் தான் இருக்கிறது. ரஜாக்கர்களுக்கு பதிலாய் RSSன் சேவக்குகளைப் போட்டுப் பார்க்கலாம். சந்திரசேகரனின் விழிப்பு கதையின் கடைசி பத்தியில் நிகழ்கிறது. நமக்கும் அப்படித் தானோ, நம் வாழ்வின் முடிவில் மட்டுமே விழிப்போமோ???

எல்லோர்க்கும் பெய்யும் மழை

ஒரு மாத காலமாக தவமிருக்கிறோம் ஒரு சொட்டு மழைக்காக. எங்கள் மலையைத் தவிர மற்ற எல்லா இடங்களிலும் கொட்டி தீர்க்கிறது. நான் நினைத்துக் கொண்டிருந்தேன் நான் மிகவும் நல்லவன் என்று. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோர்க்கும் பெய்யும் மழை என்றது பொய்த்துப் போனதோ? இல்லை, காலத்திற்கு ஏற்ப விதிகளை கடவுள் மாற்றி விட்டாரோ?ஊர் ஊராய் சென்று மரம் வெட்டும் கூட்டம் உள்ள இந்த மலைக்கு இது தான் சரியான தீர்ப்பு என்று முடிவு செய்து விட்டாரோ?
அது எப்படி சரியாகும்? மனிதருடன் விலங்குகளும், பறவைகளும், தாவரங்களும், மரங்களும், புழு பூச்சிகளும் சேர்ந்து அல்லவா வாடி நிற்கின்றன? அவை செய்த குற்றம் என்ன?

அதள பாதாளத்திலிருந்தும் தண்ணீரை தோண்டி எடுத்து விடும் இந்த நாகரிக சமுதாயம் அதை கரும்பாக, கிழங்காக, வெளிநாடு செல்லும் வெள்ளரிக் காயாக , காசாக மாற்றி , அதை எண்ணி எண்ணிப் பார்த்து பரவசமடைகிறது; காசு கொடுத்து, குடிக்க தண்ணீர் வாங்கிக் கொள்கிறது. காசிருந்தால் எதையும் செய்யலாம் என்று வருங்கால சந்ததியையும் குட்டிசுவராக்கி முன்னேறி(!) சென்று கொண்டிருக்கிறது. அந்த கடவுளுக்கும் உண்டியலில் காசைப் போட்டு சரிக்கட்டி விடலாம் என்று நினைக்கிறது. ஆனால் கடவுளின் திட்டமோ வேறு மாதிரி போய்க் கொண்டிருக்கிறது – மொத்த மனித இனத்தையே ஒழித்துக் கட்டினால் தான் மற்ற உயிரினங்கள் வாழ முடியும் என்பது தெளிவாக தெரியும் ஒரு தீர்ப்பு. மழையினால் சிலரை, மழையே இல்லாமல் சிலரை என்று அழிக்கும் வேலை தொடங்கி விட்டது போல் தோன்றுகிறது.

இதில் collateral damage ஆக, என்னைப் போன்ற சிலரை ( நல்லவர்களை 🙂 ) காவு கொடுக்க அவர் தயங்குவாரா என்ன?

விடுதலை

வாட்ஸ் அப் என்னும் மாயச் சிறையில், சுயமாக ஆசைப்பட்டு, மாட்டிக் கிடந்தேன். காலை எழுந்தவுடன், கக்கூஸ் போகும்போது எடுத்த போனை, அதன் பிறகு கீழே வைப்பது என்பது, ஓரிரு நிமிடம் தான். சாப்பிடும்போது கையிலிருக்கும் ( இட்டிலி சாப்பிடுகிறேன் பாருங்கள்!!); பயணிக்கும் போது கையிலிருக்கும் ( red fort முன்னால் நின்று ஒரு selfie, வெளி நாடு சென்றாலோ அலட்டல் அடங்காது. . .); தும்மல் போட்டால், சளி பிடித்தால், உடனே பகிர்ந்துகொள்ள விரல்கள் துடிக்கும். மொத்தத்தில் சுய தம்பட்டம் அடிக்க ஒரு நல்ல தளம். ஆனால் சிக்கிக் கொண்டால் வெளியே வருவதற்கு பெரு முயற்சி தேவை.

தவிர, குழுக்கள் அமைத்து, தகவல் என்னும் பெயரில், குப்பையிலும் கேவலமான செய்திகளை forward செய்வது, கண்மண் தெரியாமல் விவாதம் என்ற பெயரில் நண்பர்களை இழிவு செய்வது, என்று பல சித்திரவதைகளை நடத்தி, அனுபவித்து நொந்து போன ஒரு நாள் காலை, கைபேசியிலிருந்து இந்த கொடும்பாவியை தூக்கி விட்டேன். ஓரிரு நாள் பித்து பிடித்தது போல இருந்தது. ஆனால் பிறகு தான் தெரிந்தது, பித்து விட்டது என்று!

இப்பொழுது எல்லாம் நிறைய படிக்க நேரம் இருக்கிறது. அசோக மித்திரனும், சுந்தர ராம்சாமியும், ஜெயமோகனும், புதுமைப்பித்தனும், லியோ டால்ஸ்டாயும், தோஸ்தயோவ்ஸ்கியும், தி. ஜானகிராமனும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்கள். . .

நட்பும் உறவும் கொஞ்சம் பிரிந்தது போல தோன்றியது. சிந்தித்துப் பார்த்ததில், வாட்ஸ் அப் நெருக்கம் ஒரு செயற்கையான, மாயை நிறைந்த வெற்றிடம் என்பது உறுதிப்பட்டது.

என்னுடைய அலட்டல்களும் இன்னல்களும் இல்லாமல், நட்பும் உறவும் நிம்மதியாக வாட்ஸ் அப்பில் தொடர்வதாக கேள்வி!!

வாழ்க நம் உண்மை பந்தம்!