https://scroll.in/article/1021490/ramachandra-guha-how-hindutva-will-grievously-hurt-hindus
I tired to translate this. Please give feedback.
ராமச்சந்திர குஹா: இந்து பெரும்பான்மைவாதம் பரவி வரும் இந்த நிலையில் இந்துத்துவம் எப்படி இந்துக்களை தான் கடுமையாக காயப்படுத்தும் என்பது இலங்கை, பாகிஸ்தான் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளின் அனுபவத்திலிருந்து கண்கூடாக தெரிகிறது.
1980 களில் தனது நாட்டின் இன மோதல் பற்றி எழுதுகையில், இலங்கை மானுடவியலாளர் எஸ்.ஜே.தம்பையா, சிங்களவர்களை “சிறுபான்மை மனப்பான்மை கொண்ட பெரும்பான்மையினர்” என்று விவரித்தார். நாட்டின் அரசியல், அதிகாரம் மற்றும் இராணுவம் இப்படி எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தும் மக்கள் தொகையில் 70% க்கும் அதிகமான சிங்களவர்கள், அவர்களின் புத்த மதம் தான் அரசு மதம், அவர்களின் சிங்கள மொழி தான் அரசு மொழி என்று இருந்தும் தங்களை ஒரு பாதிக்கப்பட்ட சமுதாயமாகவே காட்டிக் கொண்டனர்.
சிறுபான்மைத் தமிழர்களால் அச்சுறுத்தப்பட்டதாக அவர்கள் நினைத்தனர். பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தபோது ஆங்கிலேயர்கள் தமிழர்களுக்கு மட்டும் சிறந்த கல்வி அளித்தார்கள் என்றும், பலமிகுந்த இந்தியாவின் ஆதரவைக் கொண்டிருப்பதால் தமிழர்கள் வலிமையாக இருப்பதாகவும் புலம்பினர். அவர்களின் ஆக்கிரமிப்பு தடுக்கப்படாவிட்டால், தமிழர்கள் தங்கள் தாயகமான இலங்கையை கைப்பற்றிவிடுவார்கள் என்று அஞ்சினர்.
உடுப்பி நகரில் சில குடிமக்களுக்கும் பெஜாவர் மடத்தின் சுவாமிகளுக்கும் இடையே நடந்த சந்திப்பு பற்றிய செய்தியைப் படித்தபோது, இலங்கையைப் பற்றிய தம்பையாவின் எண்ணம் எனக்கு நினைவிற்கு வந்தது. சில ஆண்டுகளாக உடுப்பி நகரமும் மாவட்டமும், , தீவிரபோக்கு இந்துத்துவத்திற்கான கர்நாடகாவின் ஆய்வகமாக உருவெடுத்துள்ளது. இந்த நகரத்தில் தான் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவரால் தூண்டப்பட்ட ஒரு உள்ளூர் கல்லூரி, இதுவரை இல்லாத ஹிஜாப் மீதான தடையை அமல்படுத்தியது. மாநிலம் தழுவிய மற்றும் நாடு தழுவிய வகுப்புவாத அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் சர்ச்சையைத் தூண்டியது. உடுப்பியில் உள்ள புகழ்பெற்ற கிருஷ்ணர் கோயிலை கூட்டாக நடத்தும் எட்டு மத நிறுவனங்களில் பெஜாவர் மடமும் ஒன்றாகும்.
முஸ்லிம் கடைக்காரர்களுக்கு தடை
பல இளம் பெண்களின் கல்வி உரிமை மறுக்கப்பட காரணமான ஹிஜாப் தடையை அமல்படுத்துவதில் அவர்கள் வெற்றி பெற்ற பிறகு, உடுப்பியின் இந்துத்துவ தீவிரபோக்காளர்கள், இந்து கோவில்கள், திருவிழாக்களின் கண்காட்சிகளில் பல ஆண்டுகளாக, அனைத்து மதங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்காக கடைபோடும் முஸ்லிம் கடைக்காரர்கள் பங்கேற்க தடை விதிக்க வைத்தனர்.
மாநில அரசிடமிருந்தோ அல்லது நீதிமன்றத்திலிருந்தோ தங்களுக்கு எந்த உதவியும் கிடைக்காது என்பதனால் சில முஸ்லிம்களும் அடங்கிய ஒரு குடிமக்கள் குழு மனச்சோர்வுடன் பெஜாவர் மடத்தின் தலைவரை அணுகி, மத நல்லிணக்கத்தை மேம்படுத்த முஸ்லீம் வியாபாரிகளின் மீதான தடைக்கு எதிராக தலையிடுமாறு கேட்டுக் கொண்டது. ஆனால் அந்த சுவாமி அவர்களிடம் ” இந்து சமுதாயம் கடந்த காலத்தில் பட்ட துன்பங்கள் பல கோடி” என்று கூறினார் . மேலும் “ஒரு இனம் அல்லது குழு தொடர்ந்து அநீதியை எதிர்கொள்ளும்போது, அதன் விரக்தியும் கோபமும் பொங்கிப் பெருக்கெடுக்கும். இந்து சமுதாயம் அநீதிகளை இனிமேலும் சகித்துக்கொள்ளாது.“ என்று அவர் கூறியதாக ஒரு செய்தித்தாள் மேற்கோள் காட்டியது.
இந்து சமுதாயம் “கடந்த காலத்தில் நிறைய துன்பங்களை அனுபவித்தது” என்று, வரலாற்றின் மேற்கோளோடு சுவாமி தொடங்கினார் என்பதை நினைவில் கொள்க. கடந்த காலம் என்று அவர் குறிப்பிடுவது இடைக்காலத்தில் இந்தியாவின் பெரும்பகுதியை ஆண்ட முஸ்லீம் மன்னர்களைப் பற்றியே என்று நினைக்கிறேன். பிரதம மந்திரி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் கர்நாடக மாநிலத்தின் முதலமைச்சர் ஆகியோரின் சமீபத்திய உரைகளை ஆராயும்போது இத்தகைய இந்துத்துவ சொல்லாட்சிகள் எங்கும் காணப்படுகின்றன.
இன்று லக்னோ அல்லது உடுப்பியில் வசிக்கும் உழைக்கும் வர்க்க முஸ்லிம்களுக்கும் கடந்த கால முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கும் என்ன தொடர்பு? ஏதும் இல்லை; இவர்களும் அதே மதம் என்ற ஒரே காரணம் அவர்களை அச்சுறுத்தவும் அவமானப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது.
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு முகலாயர்கள் அல்லது திப்பு சுல்தான் செய்ததற்காக (செய்யாமலும் இருந்திருக்கலாம், யாருக்கு தெரியும்?) இன்றைய இந்திய முஸ்லிம்களை குற்றவாளிகளாக நிற்க வைப்பது ஒரு கேடுகெட்ட செயலாகும். இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், “தொடர்ந்து அநீதியை எதிர்கொள்ளும்” இந்துக்கள் என்று பெஜாவர் சுவாமி கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் முடிச்சுப்போடுவதை தான். யாரிடமிருந்து? எப்படி இந்த அநீதி இன்று நிகழ்கிறது? மக்கள்தொகை அடிப்படையில், இலங்கையில் இருக்கும் சிங்களவர்களை விட மிக அதிக அளவில் இந்தியாவில் இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். அரசியல், சட்டம் மற்றும் ஒழுங்கு நிர்வாகத்தின் மீதான அவர்களின் மேலாதிக்கம் கிட்டத்தட்ட முழுமையானது.
கர்நாடகாவில் உள்ள முஸ்லிம்கள் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் முற்றிலும் பின்னடைந்தவர்கள். சட்டமன்றம், அரசுத்துறை அலுவல்கள், காவல்துறை, நீதித்துறை மற்றும் தொழில்களில் மிகவும் குறைவாகவே உள்ளனர். அவர்களின் பொருளாதார நிலை உறுதியற்றதாக உள்ளது. இது போதாதென்று, இந்து மேலாதிக்கத்தை முன்னிறுத்தும் ஒரு கட்சி கர்நாடகா மற்றும் மத்திய அரசு அதிகாரத்தில் உள்ளது.
இப்படி இருந்தும், பெஜாவர் சுவாமிகள் இந்துக்கள்தான் பாகுபாடு மற்றும் அநீதியால் பாதிக்கப்பட்டவர்கள் என்கிறார். பழமையான, மக்கள் மதிப்பைப் பெற்ற, பெரும் செல்வாக்கு மிக்க ஒரு சமய அமைப்பின் தலைவர் இவ்வாறு பேசும்போது, சிறுபான்மை மனப்போக்குடன் கூடிய ஒரு பெரும்பான்மை முன்னிலையில் நாம் நிற்கிறோம் என்பதை அறியவேண்டும்.
முரட்டுத்தனமான பெரும்பான்மைவாதம்
இந்துத்துவாவின் கீழ் உள்ள இந்துக்கள் உணர்வுபூர்வமாக தாம் சிறுபான்மையினர் என்று பித்துப்பிடித்து அலைகிறார்கள். ஆனால் அவர்கள் செயல்படும்விதமோ, பெரும்பான்மை என்னும் மமதையோடு. தங்கள் எண்ணிக்கையின் பலத்தைப் பயன்படுத்தி, அவர்கள் கீழ் இருக்கும் அரசு, நிர்வாகம், ஊடகங்கள் மற்றும் நீதித்துறை கட்டுப்பாட்டின் மூலம் இந்துக்கள் அல்லாதவர்கள் மீது இரக்கமின்றி தங்கள் திட்டத்தைச் திணிக்கிறார்கள்.
ஹிஜாப், ஹலால் இறைச்சி மற்றும் அசான் ஆகியவற்றை தடை செய்ய இந்துத்துவா குழுக்கள் மேற்கொண்ட முயற்சிகள் இந்த முரட்டுத்தனமான பெரும்பான்மைவாதத்தின் மிக சமீபத்திய எடுத்துக்காட்டுகள். இதுதவிர, இந்திய முஸ்லிம்களை அடிபணிய வைக்கும் மற்றும் அவமானப்படுத்தும் செயல்முறை வேறு பல வடிவங்களிலும் உள்ளது.
இந்திய முஸ்லீம்கள் மீதான இந்துத்துவாவின் தாக்குதலுக்கு ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு வேறுபட்ட பரிமாணங்கள் உள்ளன. முதல் பரிமாணம் அரசியல். இந்துத்துவா கூடாரத்திற்குள் கணிசமான பகுதியான தலித்துகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதிகளை ஈர்ப்பதன் மூலம் “இந்து” ஓட்டு வங்கியை உருவாக்கும் கொடூரமான வெற்றிகரமான முயற்சி. பெரும்பாலான மாநிலங்களில், ஏறத்தாழ 80% வாக்காளர்கள் இந்துக்களாக இருப்பதால், அவர்களில் சுமார் 60% பேர் இந்த இந்து நேச , முஸ்லீம் விரோத பாஜகவுக்கு வாக்களிக்கச் செய்தால், வெற்றி நிச்சயம் தானே. (இங்குதான் பா.ஜ.க.வை எதிர்க்க ஒரே ஒரு பெரிய அரசியல் கட்சி உள்ளது. பல கட்சிகள் வலிமையோடிருக்கும் மாநிலங்களில் கூட பாஜக வெற்றிபெற 50% இந்து வாக்குகள் போதும்.)
சிறுபான்மையினர் மீதான இந்துத்துவாவின் தாக்குதலின் இரண்டாவது பரிமாணம் தத்துவம் சார்ந்தது: இந்துக்கள் மட்டுமே இந்த மண்ணின் உண்மையான, உண்மையான, நம்பகமான குடிமக்கள், மற்ற இந்திய முஸ்லீம்கள் (இந்திய கிறிஸ்தவர்களும்) எப்படியோ சட்டபூர்வமற்றவர்களாகவும் நம்பமுடியாதவர்களாகவும் ஆக்கப்பட்டுள்ளனர். காரணம்? (வி.டி. சாவர்க்கரின் மோசமான உருவாக்கத்தில்) அவர்களின் புனித வழிபாட்டுத் தலம் அவர்களின் தாயகத்திற்கு வெளியே அமைந்துள்ளது. தாங்கள் தான் மண்ணின் மைந்தர் என்ற இந்த உணர்வு, இந்துத்துவா ஆர்வலர்களை, இந்திய முஸ்லிம்களின் உடை, உணவு வகைகள், பழக்கவழக்கங்கள், பொருளாதார வாழ்வாதாரம் மற்றும் பலவற்றைப் பற்றி தொடர்ந்து தூண்டிவிட்டு கேலி செய்ய தூண்டுகிறது.
மைசூருவில் சமீபத்தில் , துணிச்சலான மற்றும் மிகவும் போற்றப்படும் கன்னட எழுத்தாளர், தேவனூர் மகாதேவா, இந்துத்துவா குண்டர்களால் விதிக்கப்பட்ட தடையை மீறி ஹலால் இறைச்சியை வாங்கினார். அவர் இதைச் செய்யும்போது, ”வெறுப்பு என்பது வலதுசாரிகளின் ஆற்றல் பானம்” என்று கூறினார். இது ஒரு அற்புதமான சுருக்கமான விளக்கம். இதற்கு என்னுடைய சிறிய விளக்கத்தையும் கொடுக்க அனுமதியுங்கள். இந்த ஆற்றல் பானத்தில் உள்ள வெறுப்புடன் பைத்தியக்காரத்தன்மையும் கலந்துள்ளது. இந்துத்வாவின் செல்வாக்கின் கீழ் உள்ள இந்துக்கள் பாதுகாப்பற்றவர்களாக பயமுறுத்தப்படுகிறார்கள். தங்கள் முஸ்லிம் சக குடிமக்கள் மீது காரணமற்ற வெறுப்புடன் உழல்கிறார்கள்.
இந்த தத்துவத்தை கடைபிடிப்பது அண்மைக் காலத்தில் இந்திய முஸ்லிம்களை (ஏற்கனவே செய்வது போல்) கடுமையாக காயப்படுத்தும். ஆனால், தொலைநோக்கில், அது இந்துக்களையும் வேட்டையாடடும், காயப்படுத்தும். இலங்கையில் தமிழர்களை சிங்களவர்கள் இழிவுபடுத்துவதும், பாகிஸ்தானில் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், அஹ்மதியாக்கள், ஷியாக்கள் மீதான இளக்காரம், மியான்மரில் ரோஹிங்கியாக்கள் மீதான களங்கம் இவையெல்லாம் இந்த விஷயத்தில் நமக்கு அபாய அறிவிப்புகள். இந்த மூன்று நாடுகளும் மதப் பெரும்பான்மைவாதத்திற்கு அடிமையாகாமல் இருந்திருந்தால் இன்று மிகவும் சிறப்பாக இருந்திருக்கும். வெறுப்பும் பித்துநிலையும் அமைதியான வளமான சமூகங்களை வளர்க்கவோ அல்லது கட்டியெழுப்பவோ வழிவகுப்பதில்லை.